கரந்தமலை கருப்பசாமி கோவிலில் 50 கிடாய்கள் வெட்டி ஆண்கள் மட்டும் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 05:07
நத்தம்; நத்தம் அருகே குட்டுப்பட்டி கரந்தமலை கருப்பசாமி கோவிலில் 50 கிடாய்கள் வெட்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா நடந்தது.
நத்தம் அருகே குட்டுப்பட்டியில் இருந்து கரந்தமலைக்கு செல்லும் அடிவாரத்தில் உள்ளது கரந்தமலைகருப்பசாமி கோயில். இந்தக் கோயிலில் சாமி சிலைகள் இல்லாததால் வேல்களை அலங்கரித்து சாமி கும்பிடுவது வழக்கம். இக்கோவிலில் வருடந்தோறும் குட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடி படையல் விழா நடக்கும். அதன்படி இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று இரவு நடந்தது.இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள வேல்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது.பின்னர் 40 சிப்பம் அரிசியை கொண்டு 10 -க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சாதம் தயார் செய்யப்பட்டு, சாத உருண்டைகள் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை கறி குழம்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் இந்தத் திருவிழா கொண்டாடப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.