ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றினர் : நாளை ஆடித் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 06:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகபடியில் சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நடந்தது. நாளை (ஜூலை 30) சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடக்க உள்ளது.
ஜூலை 19ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. 11ம் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும், காலை 11:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார்கள். பின் மதியம் 2:40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (ஜூலை 30) அதிகாலை 2 மணிக்கு தபசு மண்டகபடியில் இருந்து அலங்கார பூ பல்லாக்கில் அம்மன் புறப்பாடாகி கோயிலுக்கு செல்வார். இதனையடுத்து நாளை இரவு 7 மணிக்கு மேல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா நடக்க உள்ளது.