மைசூரு தசரா; அபிமன்யு தலைமையில் துவங்கியது கஜ பயணம்
பதிவு செய்த நாள்
05
ஆக 2025 12:08
மைசூரு; மைசூரு தசரா விழாவை முன்னிட்டு, ஹூன்சூரில் இருந்து முதல் கட்டமாக ஒன்பது யானைகள் நேற்று மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நடப்பாண்டு மைசூரு தசரா, செப்., 22 முதல் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. இம்முறை தசரா 11 நாட்கள் வருவதால், மாநில மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜயதசமி அன்று நடக்கும் ஜம்பு சவாரியில், 14 யானைகள் பங்கேற்கும் . இதில், முதல்கட்டமாக ‘அபிமன்யு’ தலைமையில் ஒன்பது யானைகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த யானைகளை மைசூரு நகருக்கு வழியனுப்பும் விழா, ஹூன்சூரின் வீரனஹொசஹள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. இந்த முறைப்படி பூஜை செய்து, யானைகளின் பயணத்தை வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே துவக்கி வைத்தார். பின், அவர் பேசியதாவது: இயற்கை சூழலின் சமநிலைக்கு, வன விலங்குகள் அவசியம். அவற்றை பாதுகாக்க, நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். சமீபத்தில் மலை மஹாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயத்தில், புலியால் இறந்த பசுவின் இறைச்சி மீது, பசுவை இழந்தவர்கள், பூச்சிகொல்லி மருந்து தெளித்தனர். பசு இறைச்சியை சாப்பிட்ட தாய்ப்புலி மற்றும் அதன் நான்கு குட்டிகள் உயிரிழந்தன. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் வாழும் உரிமை உள்ளது. விலங்குகளின் இடத்தை ஆக்கிரமித்துள்ள நாம், இரக்கமின்றி அவற்றை கொல்வதற்கு பதிலாக, அவற்றை பாதுகாக்க உறுதி எடுக்க வேண்டும். இயற்கை சூழலை பாதுகாப்பது நம் கடமை. வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்குடியினரின் பிரச்னைகள் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதன்பின், யானை பிடிப்பு ந டவடிக்கைகள், யானைகளை அடக்குவது, வன விலங்குகளை பிடிப்பது ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட பீமா யானை, அதன் பாகன், உதவியாளருக்கு, தலா 10,000 ரூபாய் ரொக்க பரிசுடன் கூடிய, ‘அர்ஜுனா’ விருதை, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே வழங்கினார். பட்டுக்கூடு வளர்ப்புத் துறை அமைச்சர் வெங்கடேஷ், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற் றனர்.
|