இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 01:08
சாத்துார்; விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று நடந்த கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வருடம் தோறும் தை, ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 15ல் பெருந்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று கோயில் கொடி மரத்தில் கொடியேற்று விழா நடந்தது. காசி விஸ்வநாதன் பட்டர் முத்து பட்டர் ஆகியோர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருவிழா கொடியேற்றம் செய்தனர். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபா ஆராதனை நடந்தது. கொடியேற்று விழாவில் ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் இளங்கோவன் கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை பூசாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கொடி ஏற்றத்தின் போது பெண்கள் குலவையிட்டு, ஓம் சக்தி பராசக்தி என முழக்கமிட்டும் வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு பொங்கலுக்கு முடி காணிக்கை செலுத்தியும் கை, கால் கண்மலர் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாத்துாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. டி.எஸ்.பி.நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.