மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சந்நிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இச்சந்நிதியை பொன்னம்பலம் என்பர். பொன் என்றால் தங்கம். இந்த அம்பலத்தில், நமசிவாய மந்திரம் பொறிக்கப் பட்ட 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் வேயப்பட்டுள்ளன. மனிதன் ஒருநாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையை இது குறிக்கும். பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலில் உள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. ஆன்மிக ரீதியான அமைப்பும் இங்கு உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதன் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளின் அடிப்படையில் சாத்து மரங்களும், 96 தத்துவங்களை குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டு உள்ளன.