திருமலை: திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதியில் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. உலகம் முழுதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வருகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் காணிக்கையாக உண்டியலில் பணமும், ஏழுமலையானுக்கு தங்க நகைகளையும் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மங்களகிரியில் வறுமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது: திருப்பதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், ஏழுமலையானை நம்பி தொழில் துவங்கினார். அவர் நிறுவனத்தின் பங்குகள் 60 சதவீதம் விற்கப்பட்டதை அடுத்து, 7,000 கோடி ரூபாய் அவர் வருமானம் பெற்றுள்ளார். ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 121 கிலோ தங்கம் அளித்துள்ளார். அவர், தன் பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். திருப்பதி ஏழுமலையான் சிலை நாள்தோறும் 120 கிலோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும். இதையறிந்து, அவர் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக அளித்தார். இதன் மதிப்பு 140 கோடி ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.