திருக்கோஷ்டியூர் தங்க விமானத் திருப்பணி: மூல கவசத்தில் தகடு வேயும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2025 05:08
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத்திருப்பணியில் விமான மூல கலசத்தில் தங்க தகடு ஒட்டும் பணி இன்று துவங்கியது. தங்க விமானத்திற்கான கும்பாபிஷேகம் 2026 பிப் 6ல் நடக்க உள்ளது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலவர் விமானம் சிறப்பு மிக்க அஷ்டாங்க விமானமாகும். இந்த விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடந்து வருகிறது. தேவஸ்தானம், இந்து அறநிலையத்துறை, உபயதாரராக ஸ்ரீசவுமியநாராயணப்பெருமாள் எம்பெருமனார் சாரிடபிள் ட்ரஸ்ட் ஆகியோர் திருப்பணியை செய்து வருகின்றனர். விமானத்தின் மூன்று நிலைகளில் தற்போது உச்சியில் உள்ள முதல் நிலையில் தங்கத் தகடு வேயும் பணி நடந்து வருகிறது. 24 காரட் தங்கம் 35 கிலோ அளவில் திருப்பணி நடந்து வருகிறது. அதற்கான மூலஸ்தான ஸ்தூபிக்கு இன்று தங்க தகடு ஒட்டும் பணி காலை 10:30 மணிக்கு துவங்கியது. தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ,கண்காணிப்பாளர் போ.சரவண கணேசன், ட்ரஸ்ட் தலைவர் கு.மா.காந்தி,துணைத் தலைவர் ந.ரவிச்சந்திரன்,பொருளாளர் உ.கதிர்வேலன், செயலாளர் ஸ்ரீராம் பட்டாச்சார்யர் மற்றும் ட்ரஸ்ட செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பின்னர் திருப்பணி குறித்து திருக்கோஷ்டியூர் மாதவன் கூறுகையில்,‛ இக்கோயில் அஷ்டாங்க விமானத்தில் 3600 சதுர அடிக்கு தாமிரத் தகடு அடித்து கவசம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மூலைகளிலும் வேதங்களைப் போல கருடன்கள், இரு இதிகாசங்கள் போல கருடனுக்கு இருபுறமும் சிங்கங்கள். விமானத்தின் எட்டு திசைகளிலும் எட்டு கந்தர்வக் கன்னிகள். அனைத்து கந்தர்வ பிம்பங்களுக்கும் தங்க ரேக் பணி முடிந்து விட்டது. விமானத்தின் உச்சியில் ஆயிரம் ஆண்டு பழைமையான 74 அங்குலம் உயரத்தில் தங்க ஸ்தூபி உள்ளது. அதற்கும் தற்போது தங்கத்தகடு ஒட்டும்பணி துவங்கியள்ளது. கிழக்கில் லட்சுமி வராஹப் பெருமாள், தெற்கில் லட்சுமி நரசிம்மப் பெருமாள், மேற்கில் லட்சுமி நாராயணன், வடக்கில் வைகுண்டபதி உள்ளிட்ட 18 விக்ரகங்களுக்கும் தாமிரத் தகடால் செய்யப்பட்டு தங்க ரேக் போடும் பணி நடந்து வருகிறது.விமானத்திலுள்ள அனைத்து பிமபங்களுக்கும் கவசம் செய்யப்பட்டு தங்க ரேக் ஒட்டப்பட்டு வருகிறது. திருப்பணி சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம், இந்து அறநிலையத்துறை நேரடிபார்வையில் நடைபெற்று வருகிறது. 140 கிராமங்கள் கொண்ட பட்டமங்கலம்,மயில்ராயன்கோட்டை நாட்டார்கள்,பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்றுள்ளனர். இந்த தங்க விமானத் திருப்பணி நிறைவுற்று 2026 பி்ப்.6 ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.தொடர்ந்து பக்தர்கள் அஷ்டாங்க விமானத் திருப்பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.‛ என்றார்.