கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய திருக்கூடல் மலை நவநீத பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2025 10:08
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் எழுந்தருளியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதல் ஜீவ ஒடுக்கமான இடத்தில் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ராமலிங்க விலாசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதப் பெருமாள் பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கூடல் மலையிலிருந்து கடந்த 9ம் தேதி நவநீதப் பெருமாள் புறப்பாடாகி மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி,மானாமதுரை உன்னித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு கட்டிகுளம் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய நவநீத பெருமாளுக்கு மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் கட்டிக்குளம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.