மானாமதுரை மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2025 01:09
மானாமதுரை; மானாமதுரை அழகர் கோயில் தெருவில் நடைபெற்ற முளைப்பாரி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரிகளை தூக்கி சென்றனர்.
மானாமதுரை அழகர் கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியதை தொடர்ந்து தினந்தோறும் முளைப்பாரி வளர்க்கும் இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கும்மிப்பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். முளைப்பாரி உற்சவ தினத்தன்று அம்மனுக்கு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்ற பின்னர் நூற்றுக்கணக்கான முளைப்பாரி ஓடுகளை ஏராளமான பெண்கள்,குழந்தைகள் மற்றும் பக்தர்கள் தங்களது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் கரைத்தனர். கலைநிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அழகர் கோயில் தெரு பக்தர்கள் செய்திருந்தனர்.