மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு தீப்பந்தம் ஏற்றி மண் சட்டிகளில் அசைவ படையல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2025 04:10
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ விருந்து படையலை வைத்து கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் வழிபட்டனர்.
மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. புரட்டாசியில் செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தாண்டு விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராமத்தார்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.நேற்று இரவு விழாவை முன்னிட்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் பணியாரம், கொழுக்கட்டை, தேங்காய்,பழம் மற்றும் கறிச்சோறு , நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து புது மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குறத்தி அம்மன் கோயிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக எல்லை பிடாரி அம்மன் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது.கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் தாங்கள் கொண்டு வந்த படையல்களை பின்னர் தங்களது உறவினர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.