ஏழூர் முத்தாலம்மன் கோவில் திருவிழா; பூஞ்சோலைக்கு சென்ற அம்மன்
பதிவு செய்த நாள்
17
அக் 2025 05:10
பட்டிவீரன்பட்டி; பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, நெல்லூர் சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம் ஆகிய 7 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் புரட்டாசி திருவிழா 3 நாட்கள் நடந்தது. 15 நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதலும், அதனைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. சாமி சாட்டுதல் நாளிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து முத்தாலம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் 15ம் தேதி இரவு எல்லை காவல்காரசாமி பூஜைக்குப் பின்பு சிங்க வாகனத்தில் எழுந்தருளிய முத்தாலம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், அதன்பின்பு அம்மனுக்கு கண் திறப்பு, தங்க ஆபரண அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு மா விளக்கு, பொங்கல், அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முளைப்பாரி ஊர்வலமும், மேளதாளம், வானவேடிக்கைகள் முழங்க சிங்க வாகனத்தில் முத்தாலம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலைக்கு சென்றடைந்தது. திருவிழாவினை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், பெண்கள் பாட்டுபாடி கும்மி அடித்தல் போன்ற பாரம்பரியமான விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். இந்த திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
|