பழநி முருகன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது
பதிவு செய்த நாள்
22
அக் 2025 05:10
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பழநி முருகன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா இன்று (அக்.22) துவங்கியது கோயிலில் உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணிக்கு நடைபெற்றது. விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தேய்வானை , துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்கள் ஆகியவற்றிற்கு அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் மதியம் 1:00 மணிக்கு மேல் காப்பு கட்டப்பட்டது. கோயிலில் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்ரமணியன், அறங்காவலர்கள் இணை கமிஷனர் மாரிமுத்து, உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. அதன்பின் பக்தர்கள், முருகன் கோயில் திருஆவினங்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவங்கினர். விழாவில் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. கந்த சஷ்டி விழா துவக்கத்தை முன்னிட்டு வெளி மாநில, வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ரோப்கார், வின்ச் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். தரிசன வரிசையில் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம்: ஆறாம் நாள், அக்.27ல் முருகன் கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம், விளாபூஜை, மதியம் உச்சிக்காலபூஜை, சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 3:00 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின் சன்னதி அடைக்கப்படும். கோயிலில் இருந்து சின்னகுமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி,தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, அடிவாரம் எழுந்தருள்வர். அன்று இரவு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. மாலை 6.00 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். அதில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிநிதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை வதம் செய்ய சின்ன குமாரசுவாமி எழுந்தருள்வார். அதன் பின் இரவு 9:00 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும். சுவாமி கோயிலுக்கு வந்தவுடன் வழக்கப்படி ஸம்ப்ரோக்ஷன பூஜைகள் நடைபெற்று இராக்கால பூஜை நடைபெறும். திருக்கல்யாணம்: ஏழாம் நாள், அக்.28ல் முருகன் கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி,தெய்வானை சண்முகருக்கு காலை 10:30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு 7:00 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, சுவாமி தங்க குதிரையில் திருஉலா நடைபெறும். பக்தர்கள் சஷ்டி விரதம் முடிப்பர். விழா நாட்களில் கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
|