பெசன்ட் நகர்: அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 31ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. அங்கு தினசரி, உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்து, அதிகளவில் மக்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இக்கோவில் கட்டட கலையில் சிறப்பு அம்சம் பொருந்திய, அஷ்டாங்க விமானத்தில் அமைந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மகாசம்ப்ரோஷணம் நடந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்., 15ம் தேதி திருப்பணி துவக்கப்பட்டது. இதில், அஷ்டாங்க விமானம், சன்னிதிகள் மற்றும் இதர இடங்களை பழுது பார்த்து புதுப்பித்து, வர்ணம் பூசும் பணி மற்றும் கோவில் தரைதளம் அமைத்தல், மின் இணைப்பு பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி, மடப்பள்ளி, அன்னதானம் கூடம் சீரமைப்பு ஆகிய திருப்பணிகள், 2 கோடி ரூபாயில் உபயதாரர்கள் வாயிலாக நடந்தன. தற்போது, திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 31ம் தேதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்காக, யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகின்றன. கும்பாபிஷேக நாளான வரும் 31ம் தேதி காலை 8:30 மணி முதல் மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கலச புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள், அனைத்து சன்னிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்று மாலை 5:30 மணிக்கு, திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.