திருக்கச்சி நம்பிகள் வரலாறு அடங்கிய தேர் உருவாக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2025 12:10
பூந்தமல்லி: பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில், புதிதாக தேர் அமைக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.
பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் சேதமடைந்ததால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேர் திருவிழா நடக்க வில்லை. இதனால் புதிய தேர் அமைக்க, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, 69 லட்சம் ரூபாய் மதிப்பில், 27 அடி உயரம், ஐந்து நிலை உடைய புதிய தேர் அமைக்கும் பணி, கோவில் வளாகத்தில், கடந்த மே மாதம் துவங்கியது. தேர் செய்யும் பணியில் 12 பேர் ஈடுபட்டு உள்ளனர். இந்த தேரில் பெருமாளின் தசாவதாரம் மற்றும் திருக்கச்சி நம்பிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சிற்பங்கள் மற்றும் 248 மரச்சிற்பங்கள் இடம்பெற உள்ளன. தற்போது, 50 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகளை, இரண்டு மாதங்களில் முடிக்க உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.