கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் 655ம் ஆண்டு ஐப்பசி மாத திருமூல அவதார உற்சவம் கடந்த 18ம் தேதி துவங்கியது. தினமும் காலை சுவாமி வீதியுலா, திருமஞ்சனம், கண்ணாடி அறைக்கு எழுந்தருளி திருப்பாவை சாற்றுமுறை, மாலை உபன்யாசம், ஊஞ்சல் சேவை, இரவு வீதியுலா, திருவாய்மொழி சாற்றுமுறை நடந்தது. நேற்று காலை மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின், தீபாராதனை முடிந்து தேர் மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்ததது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 10ம் நாள் உற்சவமான இன்று (27ம் தேதி) காலை 8:00 மணிக்கு மாடவீதி புறப்பாடு, ரத்னாங்கி சேவை, மங்களாசாசனம், 11:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு தங்க சேஷ வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.