1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2025 04:11
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றங்கரையில் 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையில் கல்லுாரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல் ,டேவிட்ராஜ்குமார் ஆகியோர் மேற்புர கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு நாணயத்தை மாணவர்கள் கண்டெடுத்து வழங்கினர். அந்த நாணயத்தை சுத்தம் செய்து பார்த்ததில், அது ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம் என தெரியவந்தது.
இதுகுறித்து தொல்லியல் அய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது: தொல்லியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நவ.19ம் தேதி முதல் 25ம் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி உளுந்தாம்பட்டு கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தென்பெண்ணை ஆற்றில் இதுவரை கண்டறிந்த தொல்பொருள் தடயங்களை அப்பகுதி மாணவர்களுக்கு விளக்கி கூறினேன். இதனையடுத்து ஆர்வமுள்ள மாணவர்கள் என்னோடு, தென்பெண்ணையாற்றின் கரை பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது ஒரு நாணயத்தை கண்டெடுத்து கொடுத்தனர். கண்டெடுத்த நாணயம் ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம் என தெரியவந்தது. அந்த நாணயத்தின் எடை, 4.35 கிராம். அந்த நாணயத்தின் ஒருபக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ஸ்ரீராஜராஜ என பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. ஆகவே கடந்த 985ம் ஆண்டு முதல் 1,014 ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் கால நாணயம் என தெரியவந்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியவாரு ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம் விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் ஸ்ரீராஜ ராஜ என எழுதப்பட்டுள்ளது. இதுவரை தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு ஆய்வில் 50 க்கும் மேற்பட்ட இராஜராஜ சோழனின் செப்பு நாணயங்கள் மட்டுமே கிடைத்தது. முதன் முறையாக இன்று தான் இராஜராஜ சோழனின் வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.