பதிவு செய்த நாள்
19
டிச
2025
11:12
கார்காலம் முடிந்ததும் ஹனுமன் சுக்ரீவனுடன் படைகளை அழைத்து கொண்டு ஸ்ரீராமரை சந்தித்து,அவர் ஆசியுடன் கணையாழி பெற்றுக் கொண்டு தமது பயணத்தை தொடர்ந்தார் ஸ்ரீமத் ராமாயணம் எனும் காவியத்தில் ரத்தினம் போல் ஜொலிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய மகாபிரபு ஸ்ரீராம நாமத்தைச் மனதில் கொண்டு தத்தமது வீரர்களுடன் தென்திசை நோக்கி பயணத்தை தொடர்ந்தார். ஆஞ்சநேயரும் மற்ற வீரர்களும் அடர்ந்த காடுகளிலும் இருளடைந்த குகைகளிலும் அன்னையைத் தேடி திரிந்தனர்; பல மலை உச்சிகளையும் காட்டாறுகளையும் கடந்தனர். நடந்த களைப்பைப் பற்றி கவலைப்படாமல் வழியில் கிடைத்த கனிகளையும் கிழங்குகளையும் உண்டு மகிழ்ந்தனர். வீரர்களின் எண்ணமெல்லாம் அன்னையை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்தன. வீரர்களுக்கெல்லாம் வீரசிங்கம்போல் தலைமைதாங்கிச் சென்று கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
ஒருவாறு வடமேற்கு பகுதியை அடைந்தனர். அங்கு தேவசிற்பி மயனால் அமைக்கப்பட்ட குகையை கண்டு, துணிவுடன் உள்ளே சென்றனர். குகையின் உள்ளே தாமரை தடாகங்களும்,பல்சுவை கனிவகைகளும் நிறைந்து காணப்பட்டன. தங்கம் வைரம் பல அற்புதமான பொருள்களை கண்டனர்.அங்கு தடாகம் அருகே தவமிருக்கும் தேவகன்னியை கண்டு ஆஞ்சநேயர், அவளை வணங்கி களைப்பாறி செல்ல அனுமதி பெற்றார்.அனைவரும் நீராடி கனிகளை உண்டு பசியாறினர். மாருதி நித்ய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கனிகளை உண்டு பசியாறினார். மாருதி இளைப்பாற விரும்பாமல் தேவ கன்னியின் வரலாறை தெரிந்து கொள்ள வந்தார். தேவ மாதுவும் கூறினாள். இக்குகைபல மாயசக்திகளை கொண்டது. இக்குகையில் நுழைவது சுலபம் வெளியே செல்வது கடினம் அவ்வகையில் மயன் நிர்மாணித்துள்ளான். மயன் தன் சகோதரி மண்டோதரியை ராவணனுக்கு மணமுடித்த பிறகு, ஹேமை என்ற அப்சர ஸ்திரியுடன் இங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். இதை கண்டு இந்திரன் கோபங்கொள்ள, மயன் இக்குகையை ஹேமைக்கே கொடுத்து விட்டான்.ஹேமை என் உயிர்த்தோழி கலைகள் பல கற்றவள். என்பெயர் சுவயம்பிரபை நான்மேருமலையின் புத்ரி. என்தோழி தற்போது பிரம்மலோகம் சென்றிருக்கிறாள்.
இதையெல்லாம் கேட்ட மாருதி மகிழ்ந்து அவர்கள் அன்பை பாராட்டினார். தாங்கள் அனைவரும் வெளியே செல்ல அனுமதி கேட்டார். அனைவரையும் கண்களை மூடச்சொல்லி தன் மாயசக்தியால் சமுத்திரக்கரையோரம் சேர்த்து வாழ்த்து கூறி மறைந்தாள் சுவயம் பிரபை. வானர வீரர்கள் கரையோரம் அமர்ந்தனர். அப்போதுதான் சுக்ரீவன் கொடுத்த ஒருமாத கெடு முடிந்துவிட்டது நினைவில் வந்தது. அனைவரும் அழுது புலம்பினர். அங்கதன் அரசன் கையால் மடிவதைவிட தம்முயிரை தாமே மாய்த்துகொள்வது என ஓரிடத்தில் அமர்ந்தான். வீரர்களும் அவனுடன் அமர்ந்தனர். மாருதி பலவாறு ஆறுதல் கூறியும் எவரும் செவிசாய்க்கவில்லை.
மாருதி ஜெய்”ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்” என்னும் திருநாமத்தை சிந்தையில் கொண்டு கடலை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். வீரர்களின் அழுகுரல்கேட்டு மஹேந்திர பர்வதத்தில் வாழ்ந்துவந்த கழுகு வர்கத்தை சேர்ந்த சம்பாதி எனும் வயதானவர் இவர்கள் அருகில் வந்தார். வீரர்கள் ஜடாயுவிற்கும் ராவணனுக்கும் நடந்த சண்டையைப்பற்றி பேசிக்கொண்டனர். சம்பாதி அவர்களை அணுகி ஜடாயுபற்றி கேட்டார். ஜடாயு சம்பாதியின் சகோதரன்.வீரர்கள் தங்களைப்பற்றி அனைத்தையும் கூறி, ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதை கூறினர். . சம்பாதியும் ஜடாயுவும் சகோதரர்கள். இருவரும் ஒருமுறை சூரியனை நோக்கி
பறந்து செல்ல சூரியக்கதிர் தாக்கி இருவரும் வெவ்வேறு திசையில் விழுந்தனர். சம்பாதியின் இறக்கை கருகி மஹேந்திரபர்வதத்தில் விழுந்தார். ஒருநாள் ராவணன் சீதையை கவர்ந்து செல்வது கண்டு அவனுடன் போராடி இறக்கை இழந்து நிலத்தில் வீழ்ந்து, ஸ்ரீராமரிடம் உண்மை கூறி உயிர் துறந்தார்.சம்பாதி தன்மகன் சுபார்சுவன் உதவியுடன் மஹேந்திர பர்வதத்தில் மஹரிஷி ஆசியுடன் வாழ்ந்து வந்தான். முனிவர் தம் தவ வலிமையால் சம்பாதிக்கு ஏற்பட்ட துயரம் தீர கிஷ்கிந்தை வீரர்களுக்கு உதவி புரிவாய் என்றார். ஆதலால் இன்று உங்களை சந்தித்தேன். ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு இலங்கை சென்றான். இலங்கை ஒரு சின்ன தீவு இக்கடலுக்கப்பால் உள்ளது. இதை கூறியதும் ஸ்ரீராமர் அருளால் சம்பாதிக்கு முன்போல் இறக்கைகள் வந்தன. சம்பாதி தன்தம்பி ஜடாயுவிற்கு ஈமக்கடன்களை செய்து முடித்தார்.
வீரர்கள் மகிழ்ந்தனர் ஆனால் கடலை தாண்டுவது எப்படி என்று கலங்கினர். அப்போது பிரம்மதேவரின் அம்சமான ஜாம்பவான் ஆறுதல் கூறி, தவமிருந்த மாருதியிடம் சென்று சம்பாதி சொன்னதை சொல்ல, மாருதியும் கடலை எவ்வாறு தாண்டுவது என்று கலங்கி நின்றார்.ஜாம்பவான் மகிழ்ச்சியுடன், “ஆஞ்சநேயா! நீ யௌவன பிராயத்தினன். இருப்பினும் வீரத்தில் இவ்வீரர்களை விட அதிபராக்கிரமும் அபாரசக்தியும் கொண்டவன்.
சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தெரிந்த வேதவிற்பன்னன். நீ கருடனின் இறக்கைகளைப் போன்ற புஜபலம் கொண்டவன். அஞ்சனையின் மைந்தன்,கேசரி நந்தன், வாயு புத்திரன் என்பதை மறந்தாயோ? தேவாதி தேவர்களின் பரிபூரண பேரருளைப் பெற்றவன் அல்லவா நீ! காற்றிலும் நீரிலும் நெருப்பிலும் நிலத்திலும் மிக வேகமாகச் செல்லும் செயல் வீரன். ப்ராண தேவர் மற்றும் ஸ்ரீருத்ரனின் அம்சம் அல்லவோ !!
உன் பலத்தைப்பற்றி பாராட்டுவது என்பது கடலுக்கு கரை காண முயலுவது போலாகும். ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் நினைத்த மாத்திரத்திலேயே செல்லும் வல்லமை பெற்றவன் நீ ! அன்று முனிவர்கள் கொடுத்த சாபத்தையும்,சாப விமோசனத்தையும் நினைவிற் கொள்வாய்! உத்தம குணங்களுக்கு நீயே உறைவிடம். பக்திக்கும் பலத்துக்கும் பராக்கிரமத்துக்கும் நீயே தலைவன். ஆகவே நீ தென்திசை நோக்கிச் சென்று சீதாதேவியைப் பற்றிய தகவல்களை அறிந்து வருவாயாக! உன் ஓருவனால்தான் சீதாதேவியைக் கண்டுபிடிக்கத் தக்க வழி பிறக்கும்” என்று கூறினார்.
ஆஞ்சநேயர் உள்ளமும் உடலும் பூரித்தார். இனந்தெரியாத ஏதோ ஒருவித புது சக்தியால் பழைய ஞாபகங்களுடன் புதுப்பொலிவு பெற்றார். தான் அமர்ந்திருந்த மரத்தை ஒரு கையால் வேறொடு பிடுங்கி பல அடி தூரம் வீசி எறிந்தார்.
ஆஞ்சநேயரின் புஜபல பராக்கிரமம் கண்டு வானர வீரர்கள் வியந்தனர். அவரது அகண்ட மார்பும் புஜங்களும் வீரத்தால் துடித்தன. அவரது கண்களில் பிரகாசம் பொங்கியது. எழுந்து நின்று ஜாம்பவானை நமஸ்கரித்தார்.ஜெய் ஸ்ரீராம் என்று கோஷத்துடன் விண்ணில் பறந்தார்.