பதிவு செய்த நாள்
25
மார்
2026
12:03
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு இது.
விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட் தாலுகா புக்கசாகரா கிராமத்தில், ‘ஸ்ரீ ஏழுஹெட்டே நாகப்பா கோவில்’ என்ற, ஸ்ரீஏழுதலை நாகப்பா கோவில் அமைந்துள்ளது. 1516ல் விஜயநகரை, பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்து வந்தார். இந்த நேரத்தில், விஜயநகரை ஒட்டி உள்ள புக்கசாகரா, ராமசாகரா, வெங்கடபுரா ஆகிய மூன்று கிராமங்களிலும் மழையின்றி விவசாயிகள் தவித்து வந்தனர். இதுதொடர்பாக மன்னரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
அவரும், பம்பா விருபாக் ஷப்பா கோவிலில் மனமுருக வேண்டினார். இதுபோன்று பல நாட்கள் தினமும் சுவாமியை தரிசனம் செய்து வந்தார். ஒரு நாள் இரவு, அவர் துாங்கும் போது, அவரின் கனவில் ஆதிசேஷன் தோன்றினார். பின், புக்கசாகராவில் ஒரு சிறிய மேட்டின் மீது தோன்றி மறைந்து, தன் ஏழு தலையை உயர்த்தி அருள்பாலித்தார்.
இதுகுறித்து தன் ராஜகுரு ஸ்ரீ வியாசராஜா தீர்த்தாவிடம் மன்னர் கூறினார். கனவில் ஆதிசேஷன் ஆன்மிக தகவலாகும். இதன் மூலம் வறண்ட நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும்படி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கிருஷ்ணதேவராயரின் உத்தரவின்படி, விவசாயிகள் தண்ணீர் இன்றி சோர்வடைய கூடாது என்பதற்காக, கால்வாய் அமைக்க உத்தரவிட்டார். இதனை ராஜ கால்வாய் என்று இன்னும் அழைக்கின்றனர். இந்த கால்வாயினால், ஆண்டு முழுதும் இக்கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்து வந்தது.
மன்னரின் கனவில் தோன்றிய ஆதிசேஷன், குண்டுலுகெரே வெங்கடபுரா வழியாக வந்து புக்கசாகராவில் நின்றார். கனவில் தோன்றி மறைந்த அதே இடத்தில் ஏழு தலை கொண்ட ஆதிசேஷன் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். ராஜகுரு வியாசராஜா, விக்ரஹத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இக்கோவிலை, ‘ஸ்ரீ ஏழுதலை நாகப்பா கோவில்’ என்று அழைக்க துவங்கினர்.
ஹோலஹுண்டி அர்ச்சகர் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பூஜித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கோபாச்சார்யா முதல் தற்போது ஸ்ரீ நரசிம்மாச்சார்யா வரை பூஜித்து வருகின்றனர். ஆதிசேஷனை வணங்குவதால், பிள்ளை பேறு, திருஷ்டி கழிதல், காது பிரச்னை, திருமண தடை, தோல் நோய்கள் குணமாவதாக நம்புகின்றனர்.
விவசாய நிலங்களால் சூழப்பட்ட இக்கோவில் எளிமையான மற்றும் ஆன்மிக உயிரோட்டம் மிக்க கட்டமைப்புடன், பாரம்பரிய திராவிட பாணியில் கட்டப்பட்டு உள்ளது. கருவறையில் சிவலிங்கம், நந்திக்கு பின்னால், தன் ஏழு தலைகளுடன் ஆதிசேஷன் வீற்றிருக்கிறார்.
நாகபஞ்சமி, மஹாசிவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் அன்றைய தினம், ஆதிசேஷனுக்கு பால் அபிஷேகம், மஞ்சள், மலர், முட்டை அர்ப்பணித்து வழிபடுவர். திருவிழா நாட்களில், மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருவர்.