பதிவு செய்த நாள்
04
ஜன
2026
12:01
பரமக்குடி: பரமக்கு சிவன் கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் அதிகாலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு ஆருத்ரா தரிசன விழா துவங்கியது.
ஜன.,2 இரவு சிவகாமி அம்பாள், நடராஜமூர்த்தி உற்சவர் பச்சை சாத்தி புறப்பாடாகி ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஹோமங்கள் நிறைவடைந்து, திரவியம், பால், பன்னீர் உள்ளிட்ட அனைத்து வகை அபிஷேகங்களும் நடந்தன.
பின்னர் மூலவருக்கு சந்தனக் காப்பு, வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 5:15 மணிக்கு ஆருத்ரா தரிசன மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீற்றிருந்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதே போல் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடந்த நிலையில் நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசன விழா நடந்தது. பின்னர் மாணிக்கவாசகர், சிவகாமி சுந்தரி, நடராஜர் தனித்தனி தேரில் வீதி வலம் வந்தனர்.
எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் நடராஜன் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது.
இதேபோல் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமிசுந்தரிக்கு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுவந்த விநாயகர் கோயிலில் நடராஜர் சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்மையார், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.