28 ஆண்டுகளுக்கு பின் பாசியம்மன் சிலை; சிவகங்கை தேவஸ்தானத்திடம் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2026 05:01
திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாசியம்மன் சிலை 28 ஆண்டுகளுக்கு பின் சிவகங்கை தேவஸ்தானம் பொறுப்பில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சோழ மன்னர்களால் 11 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பாசியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் எட்டு கைகளுடன் 5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பாசியம்மன் சிலை இருந்தது. 1998 ஜூன் 3 ல் திருடு போனது. 1999 ல் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் வெளி நாட்டிற்கு கடத்த முயன்ற போது போலீசார் கைப்பற்றினர்.
அந்த சிலை திருவாடானை தாலுகா அலுவலக பாதுகாப்பில் இருந்தது. சுவாமி கும்பிடுவது சம்பந்தமாக பாசிபட்டினம் மற்றும் கலியநகரி கிராம மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் சோழர்கள் தங்களது போர் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமர்ந்த நிலையில் உள்ள பாசியம்மன் கோயிலை கட்டினர். தற்போது இக்கோயில் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்துள்ளது. கோயிலை சீரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், நான்கு மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கோயிலில் திருப்பணி செய்யப்படும் என சிவகங்கை தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள சிலையை கோயிலுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. அதன்படி ஜன.,7 ல் சிலையை ஒப்படைக்க முயன்ற போது இரு கிராம மக்களும் திரண்டு சென்று சிலைக்கு உரிமை கொண்டாடினர். இதனால் சிலையை ஒப்படைக்கவில்லை. நேற்று சிலையை ஒப்படைக்க முடிவு செய்து இரு கிராம மக்களும் தாலுகா அலுவலகத்திற்குள் செல்லாத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராகு காலம் முடிந்த பின் மதியம் 12:00 மணிக்கு மேல் பாசியம்மனுக்கு காளையார்கோயில் ஸ்தபதி சண்முகநாதன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மணல் அள்ளும் இயந்திரம் மூலம் சிலையை வாகனத்தில் ஏற்றப்பட்டு பாசிபட்டினத்தில் உள்ள பாசியம்மன் கோயிலில் சிலை வைக்கப்பட்டது. தாசில்தார் ஆண்டி, டி.எஸ்.பி., சீனிவாசன், சிவகங்கை தேவஸ்தானம் (சத்திரம்) மேலாளர் பூசத்துரை, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.