எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாள்தான் ரதசப்தமி. உத்ராயன தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகள் ஏழு எடுத்து அத்துடன் அட்சதையும் (சிறிதளவு பச்சரிசி) விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் (கன்னி மற்றும் சுமங்கலிகள்) ஏழு எருக்கன் இலைகள் மேல் சிறிதளடு மஞ்சள் தூளையும் அட்சதையையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். அதற்குப்பின் சூரிய நமஸ்காரம் அவசியம் செய்யவேண்டும். அப்போது அர்க்ய மந்திரம் சொல்லி நீர்விட வேண்டும். வேதம் அறிந்த விற்பன்னர்களிடம் உபதேசம் பெற்று மந்திரத்தை அறிந்துகொள்வது நலன் தரும்.
கவுர சபையில் பாஞ்சாலிக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, அதை தட்டிக்கேட்காமல் இருந்ததனால் ஏற்பட்ட வினை, யுத்தக்களத்தில் அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மரின் மனதை வாட்டி வதைத்தது. வியாச முனிவர் வந்து எருக்கன் இலைகளின் மகிமையை பீஷ்மருக்கு எடுத்துரைத்து, அவற்றால் பீஷ்மரின் மேனியை அலங்கரிக்க, கொஞ்சம்கொஞ்சமாக மன அமைதியடைந்தார். பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தவர், அந்த நிலையிலேயே முக்தியும் அடைந்தார். "அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது? என்று தர்மர் வருந்தினார். அதையறிந்த வியாசர், ""தர்மரே! வருந்தவேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும் தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் அவசியமே இல்லை. மட்டுமின்றி, வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும். ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள், தங்களுடைய பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றார். எனவே, ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். மேலும் ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைகளுக்குச் சென்று, பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.