பதிவு செய்த நாள்
10
பிப்
2026
12:02
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், கோடி லிங்கங்களுடன் கூடிய இன்னொரு கோவிலும், கர்நாடகாவில் இருப்பது பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இக்கோவில் எங்கு உள்ளது, அதன் வரலாறு பற்றி பார்க்கலாம் .
கொப்பால் மாவட்டம் குஷ்டகி தாலுகா, புரா கிராமத்தில் உள்ளது சோமேஸ்வரா கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், விஜயநகர மன்னர்கள் காலத்தில், மன்னர்களின் மண்டலிகராக இருந்த ஓஹிலேஸ்வரர் என்பவரால் கட்டப்பட்டதாக, இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
மஹாபாரத காலத்தில் பாண்டவர்களின் தாயான குந்திதேவி மேற்கொண்ட கடுமையான கஜ கவுரி விரதத்தின் பயனாக, குந்தி தேவியின் இரண்டாவது மகன் பீமசேனன் இங்கு கோடிலிங்கத்தை நிறுவினார் என்ற வரலாறும் உள்ளது.
நைவேத்தியம் செய்வதில் பக்தர்கள் செய்த தவறால், ஒரு லிங்கம் கோவிலில் இருந்து கோபித்து கொண்டு சென்றதாகவும் வரலாற்று கதைகள் கூறுகின்றன.
சைவ, வைணவ நினைவு சின்னங்களை தாங்கி நிற்கும் கோவிலில் உள்ள லிங்கங்களுக்கு சோழ, நட்சத்திர, படவ, பஞ்ச, அஷ்ட, நவக்கிரக, முனிசு, பிர்தானி, துவாதசி உட்பட பல பெயர்கள் உள்ளன.
ராமாயணம், மஹாபாரத கதையை சொல்லும் சிற்பங்களும் இங்கு உள்ளன. சோமேஸ்வரா அல்லது சோமநாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோவில் கட்டட கலைக்கு எடுத்துக்கட்டாக உள்ளது.
பழங்கால கோவில் என்பதால் தொல்லியல் துறை பராமரிக்கிறது. சிவராத்திரி விழா இங்கு கொண்டாடப்படும் முக்கிய விழாவாக உள்ளது.
கர்நாடகா மட்டுமின்றி அண்டை மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவர். யுனேஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, ஹம்பியில் இருந்து புரா கிராமம் 74 கி.மீ., துாரத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கோவிலின் நடை தினமும் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை திறந்து இருக்கும்.