ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், தை மாத இறுதி செவ்வாய் கிழமையான நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மரிக்கொழுந்து மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மயிலிறகு மாலை அலங்கார சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து, முருகப்பெருமானை வழிப்பட்டு சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் செய்தனர்.