ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு புறப்பட்டது ‘மாசிப்பெட்டி’ மகாசிவராத்திரி வழிபாடுக்கு திரண்ட பக்தர்கள்
பதிவு செய்த நாள்
16
பிப் 2026 12:02
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை, மாசிக்களரி மகா சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்கு 5 மாசிப்பெட்டிகளை பூஜாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் புடைசூழ எடுத்துச் சென்றனர். உசிலம்பட்டி பகுதியில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி திருவிழாவை, குலதெய்வ வழிபாடாக கொண்டாடுகின்றனர். கருமாத்துார் மூணுசாமி கோயில்கள், வாலாந்துார் அங்காளஈஸ்வரி, திடியன் சோணை முத்தையா, ஆரியபட்டி கல்யாணகருப்பசாமி, நாட்டாமங்கலம், கொக்குளம் ஆதிசிவன் உள்ளிட்ட கோயில் களுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக மக்கள் திரண்டு வருகின்றனர். இதில் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வழிபாட்டுக்கும் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். இதற்காக நேற்று காலை 10:30 மணியளவில், உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி வழிபாட்டுக்காக அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய மாசி பெட்டிகளை 5 பூஜாரிகள், எட்டும் இரண்டும் பத்து தேவர் குடும்பத்தினர், அக்கா மக்கள் குடும்பத்தினர், கோடாங்கிகள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, இளந்தோப்பு வழியாக ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று ஆதி வழக்கப்படி பக்தர்கள் ‘மாசி பச்சை’ கொண்டு வந்து இரவு முழுவதும் வழிபாடு நடந்தது. இன்று பிப். 17, மாலை மீண்டும் பெட்டிகள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வரும்போது, வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து அய்யன், மாயாண்டி சுவாமிகள் ஆணிச்செருப்பில் நடந்து கோயிலுக்கு வருவர். இதனை பார்க்க ஏராளமான பக்தர்கள் திரள்வர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
|