பதிவு செய்த நாள்
24
பிப்
2026
12:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்துக்கான அலங்காரப் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருகின்றன.
காரமடை அரங்கநாதர் கோவிலில் வரும் 2ம் தேதி தேரோட்டத்துக்காக, தேர் பளிச்சிடும் பணிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக சுற்றுவட்டாரம் விழாக்கோலம் பூண்டு வருகிறது. தேர் சுற்றியும் கட்டப்படும் கொடுங்குகளுக்கும், கோபுரத்தில் வைக்கப்படும் மகுடத்துக்கும் அலங்காரம் செய்யும் பணிகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து அலங்கார பணிகளில் ஈடுபட்டுள்ள, சிவகங்கை மாவட்டம், பாகனேரியை சேர்ந்த பழனியப்பன், நாகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:
தேர் அலங்காரப் பணிகளில் ஏழு பேர் ஈடுபட்டு வருகிறோம். முதலில் மூங்கில்களால் செய்துள்ள கொடுங்குகளுக்கும், மகுடத்துக்கும் சிகப்பு நிற துணியால் தைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல் பசையை தடவி, பல வண்ண காகிதங்கள் ஒட்டப்படும். அனைத்து அலங்காரப் பணிகளும், 27ம் தேதிக்குள் முடிக்கப்படும். 28ம் தேதி அலங்காரம் செய்து வைத்திருக்கும் மகுடம், தேர் உச்சியில் வைக்கப்படும். பின், தேர் சுற்றி கொடுங்குகள் வைத்து கட்டப்படும்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தேர் அலங்காரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு முறையும், புதிய வண்ணங்களில் காகித அலங்காரம் செய்யப்படும். இப்பணி, எங்களுக்கு நிறைந்த மன நிறைவை தருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.