பதிவு செய்த நாள்
25
பிப்
2026
11:02
பாலக்காடு: பாலக்காடு கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், செம்பை சங்கீத உற்ஸவம் நேற்று கோலாகலமாக துவங்கியது.
கேரள மாநிலம், பாலக்காடு கோட்டாயி அருகே உள்ள செம்பை பார்த்தசாரதி கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம் ஏகாதசி உற்ஸவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்ஸவத்தின் கொடியேற்றம், கடந்த 23ம் தேதி நடந்தது. நான்கு நாள் சங்கீத உற்ஸவம் நேற்று கோலாகலமாக துவங்கியது.
நேற்று மாலை இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதரின் உருவச்சிலை முன், குத்துவிளக்கேற்றி சங்கீத உற்ஸவத்தை துவக்கி வைத்தார். விழாக்குழு தலைவர் செம்பை சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கீழத்தூர் முருகன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, டி.வி.கோபாலகிருஷ்ணனின் சங்கீத கச்சேரி நடந்தது. இன்று, (25ம் தேதி) மாலை, மாதங்கி, சுகுமாரி நரேந்திரன் மேனன்; நாளை நெடும்பள்ளி ராம்மோகன், மீரா ராம்மோகன் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது.
வரும், 27ம் தேதி காலை, 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 10:00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை, இரவு, 8:30க்கு விஜய் ஜேசுதாஸ் கச்சேரி நடக்கிறது. வரும், 28ல் ஏகாதசி உற்ஸவம் நிறைவடைகிறது.