ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அன்னக்கொடை உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2026 05:03
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உற்ஸவம் நடந்தது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மகத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு தயிர் சாதம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மதியம் 1:00 மணிக்கு வெள்ளிகுறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அப்போது 11 படி தயிர் சாதம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோஷ்டி, தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி முன்பு படைக்கப்பட்ட தயிர் சாதம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.