பதிவு செய்த நாள்
03
மார்
2026
07:03
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் தேர் திருவிழா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை, தீ பந்தங்களை எடுத்து வந்து, பெருமாளுக்கு பந்த சேவை நேர்த்த கடனை செலுத்துவர்.
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் உள்ள சுயம்பு வடிவில் உள்ள அரங்கநாத பெருமாளுக்கு ஒரு கதை உள்ளது. காரமடை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் மாடுகளை காரை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதில் ஒருவர் மேய்க்கும் குறிப்பிட்ட மாட்டின் மடியில் மட்டும் பால் இல்லாமல் இருந்துள்ளது. மாடுகளை மேய்க்கும் தொட்டியன் இதை தெரிந்து கொள்ள முயன்றார்.
ஒருநாள் மேய்ச்சலுக்கு காரை வனத்திற்கு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த குறிப்பிட்ட பசு செல்லும் வழியைப் பின் தொடர்ந்து, இவரும் சென்றுள்ளார். அந்த பசு ஒரு புதர் அருகே சென்று, பாலை தானாகவே அந்த புதர் மீது சுரந்துள்ளது. இதைப் பார்த்த தொட்டியன் ஆவேசமாகி கொடுவாளை எடுத்து புதரை வெட்டியுள்ளான். அப்போது புதரில் இருந்து ரத்தம் பிரிட்டு வந்துள்ளது. இதை பார்த்த தொட்டியன் மயக்கம் அடைந்தார். மாலை ஆனதும் மாடுகள் வீட்டிற்கு வந்துள்ளன.
ஆனால் மாடுகளை மேய்க்கச் சென்ற தொட்டியன், இரவு ஆகியும் வராததை அறிந்த உறவினர்கள், பட்டர் தலைமையில் ஊர்காரர்கள் இரவில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருளில் வெளிச்சத்தை கொடுக்க, மக்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தி சென்றனர். தொட்டியனுக்கு கொடுக்க பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றை உடன் எடுத்து சென்றனர்.புதர் அருகே மயங்கி நிலையில் கிடந்த தொட்டியனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு தண்ணீரை தெளித்து அவரை எழுப்பிய போது, கூட்டத்தில் ஒருவர் ஆவேசமாகி அரங்கநாதர் சுவாமி காட்சி கொடுத்துள்ளார். சுயம்பு வடிவில் அரங்கநாதர் சுவாமி இருப்பதை பார்த்த கூட்டத்தினர், தீ பந்தங்களை கையில் ஏந்தி, தாங்கள் கொண்டு வந்த தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றை கலந்து அரங்கநாத பெருமாளுக்கு படைத்து வழிபட்டனர். அப்போது பக்தர்கள், ரங்கா பராக், கோவிந்தா பராக் (ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்) என்று ஆடிப் பாடியுள்ளனர். அதனால் மக்கள் தீ பந்தங்களை பெருமாள் சுவாமியாக எண்ணினர்.
ஒவ்வொரு ஆண்டும் அரங்கநாத பெருமாள் தேர் திருவிழாவில், தேர் நிலைக்கு வந்து சேர்ந்தவுடன், தண்ணீர் சேவை நடைபெறும். பக்தர்கள் கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, பைகளில் தண்ணீர் எடுத்து வந்து, அர்த்த மண்டபத்தில் சேர்த்து அரங்கநாத பெருமாளை வழிபடுவர். அடுத்த நாள் பல ஆயிரக்கணக்கான தாசர்கள், தனது கரங்களில் தீப்பந்தங்களை ஏந்தி, சிறியவர் முதல் பெரியவர் வரை பெருமாளை நினைத்து பக்தி பரவசமாய், தாரை தப்பட்டை ஒலியுடன், ரங்கா பராக், கோவிந்தா பராக் எனக் கூறி, நகரில் வலம் வந்து, அக்னியால் அரங்கநாத பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த தீ பந்தங்களை பாரம்பரியமாய், பெருமாளாகவே நினைத்து பாதுகாத்து வருகின்றனர். தேர் திருவிழாவை காண வந்த பக்தர்கள் கூட்டத்தை விட, தீ பந்த சேவை அன்று பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.