ஸ்ரீவிஜயேந்திர விஜயம் சொற்பொழிவு; ஆதிசங்கரரே உலகின் குருநாதர்
பதிவு செய்த நாள்
16
மார் 2026 11:03
திருப்பூர்: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா, நேற்று திருப்பூர் கிளை ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நேற்று நடந்தது. மாலை, 5:30 மணி முதல் 6:30 வரை, வேத பாராயணம் நடந்தது. தொடர்ந்து, சோழவந்தான் கண்ணன் கணபாடிகளின், ‘ஸ்ரீவிஜயேந்திர விஜயம்’ என்ற சொற்பொழிவு நடந்தது. அவர் பேசியதாவது: ஒவ்வொருவர் வாழ்விலும், குரு அனுக்கிரகம் அவசியம் தேவை. குரு அருளாசி கிடைத்துவிட்டால், நமக்கு அனைத்துமே கிடைத்துவிடும். எப்படி வாழ வேண்டும் என்பதும் புரிந்துவிடும். மனிதராக பிறந்தவர்களுக்கு, சற்கதி என்பது மிக முக்கியம்; சற்கதி உருவாக, நமக்கு சித்த சுத்தி உண்டாக வேண்டும். புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே மனித பிறவியை அடைகிறார்கள். மனிதராக பிறப்பதே புண்ணியம். இறைநெறியுடன் வாழ்ந்து, இறைவனை சென்றடைய வேண்டும்; இதை வீணடிக்கக்கூடாது. பவித்ரமானவர்களாக மாறினால் மட்டுமே பகவான் நம்மை சேர்த்துக்கொள்வார். தர்ம சாஸ்திரங்களை நித்தமும் கடைபிடிப்பவர்களுக்கு கயிலாயத்தில் தனி இடம் உண்டு. வேதமந்திரங்கள்தான், மகான்களின் சொத்து; நாமும் அதை பாதுகாக்க வேண்டும். நமக்கு குருநாதர் தான் முதல் கடவுள். ஆயிரம் தோஷம் இருந்தாலும், குருநாதரின் ஆசி நம்மை பாதுகாக்கும். ஆன்மிகமும், ஞான மார்க்கமும், குரு ஆசியால் தான் கிடைக்கும். ஆதி சங்கர பகவான் தான் உலகிற்கு குருவாக இருக்கிறார். சிவனாகிய பரமேஸ்வரனே, ஆதிசங்கரராக இருந்து உலகை வழிநடத்துகிறார். முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்தி காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இக்கோயிலில் மார்ச் 10ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுடன் பங்குனிவிழா துவங்கியது. முக்கிய நிகழ்வாக நாளை கரகம், மது முளைப்பாரி உற்ஸவமும், மார்ச் 18 அன்று பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். அன்று மாலை பருப்பூரணியில் கரகம் சேர்த்தல், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும். இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நகர் வலம் வந்து நேர்த்தி செலுத்தினர். பக்தர்கள் பால் குடம், அக்னி சட்டியுடன் முத்தாலம்மன் கோயிலில் இருந்து தேவகோட்டை ரோடு, கொப்புடையம்மன் கோயில், முதல் போலீஸ் பீட், வ.உ.சி., ரோடு வழியாக ஊர்வலமாக சென்று முத்து மாரியம்மன் கோயிலில் நேர்த்தி செலுத்தினர். கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பால்குடம், அக்னி சட்டி எடுத்துவந்த பக்தர்களின் பாதங்களில் பஜார் பள்ளிவாசல் முன் இஸ்லாமியர்கள் தண்ணீர் அடித்து குளிர வைத்து அனுப்பினர்.
|