உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ஆண்டுகளுக்கு முன், இக்கிராமத்தை சேர்ந்த ஒருவரின் கனவில் தோன்றிய விநாயகர், ‘இப்பகுதில் நான் குடிகொண்டிருக்கிறேன்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.
கண் விழித்த அவர், கிராமத்தினரிடம் கூறினார். அவர்களும் விநாயகர் சொன்ன இடத்துக்கு மறுநாள் சென்றனர். அங்கு சுயம்பு வடிவமாக விநாயகர் விக்ரஹத்தை கண்டுபிடித்தனர். இது, இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்த கிராமத்தினர், ஆன்மிக சக்தி நிறைந்த இப்பகுதியில் விநாயகருக்கு சிறிய கோவில் கட்டினர். இக்கோவிலுக்கு, ‘வீர கணபதி கோவில்’ என்றும் பெயரிட்டனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் தரிசித்து வருகின்றனர். கடந்த, 1984ல் இக்கோவில் பக்தர்கள் வசதிக்காக சீரமைக்கப்பட்டது. தற்போது இக்கோவில், இப்பகுதியில் முக்கிய ஆன்மிக தலமாக மாறி உள்ளது.
இக்கோவில், தென்மாநிலங்களின் கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கோவிலின் நுழைவு வாயிலில், அழகாக செதுக்கப்பட்ட துாண்கள் உள்ளன. கருவறையில் சுயம்புவாக வீர கணபதி விக்ரஹம் உள்ளது. இக் கோவில் வளாகத்தில் பிரார்த்தனை மண்டபம் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்திக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். விநாயகருக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. கூடுதலாக திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.