பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், இரண்டரை கோடி ரூபாய் செலவில் புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. கடந்த தைப்பூச நாளன்று முதல் முறை தேரோட்டம் நடந்தது. இரண்டாவது முறையாக கடந்த மாதம் கிருத்திகையன்று தேரோட்டம் நடந்தது. மூன்றாவது முறையாக, நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை சமேதர முருகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. தங்கத்தேரில் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தங்கத்தேர் உள் பிரகாரத்தில் மின்னொளியில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது. உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் கணேச மூர்த்தி, யசோதா, பரமேஸ்வரன், சங்கர் மற்றும் திரளான பக்தர்கள் தங்க தேரை இழுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது, ஒவ்வொரு மாதமும், கிருத்திகையன்று மாலை 6:30 மணிக்கு தங்க தேரோட்டம் நடைபெறும். கோவில் அலுவலகத்தில் 5,000 ரூபாய் செலுத்துவோர் தங்க தேரை இழுத்து இறையருள் பெறலாம், என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.