பதிவு செய்த நாள்
31
மார்
2026
09:03
பரசுராமரின் தாயார் மீண்டும் உயிர்த்தெழுந்த பின், பக்தர்களுக்கு நாகவி எல்லம்மா என்ற பெயரில் அருள்பாலித்து வரும் ஸ்தலம், கலபுரகி மாவட்டம் சித்தாபூரின் நாகவி கிராமத்தில் உள்ள ஸ்ரீ நாகவி எல்லம்மா கோவில்.
புராணங்களின்படி, சப்தரிஷிகளில் ஒருவர் ஜமதக்னி. இவரின் மனைவி ரேணுகா தேவி. தினமும் சிவனுக்கு ஆற்று மணலில் பானையை வடிவமைத்து, அதில் தண்ணீர் எடுத்து சிவனுக்கு அபிேஷகம் செய்து வந்தார். அவ்வாறு ஒரு முறை வானத்தில் சித்திரரதன் என்ற கந்தர்வனின் தோற்றத்தை கண்டு, கணப்பொழுது மயங்கி, அவரை மனதில் நினைத்ததால் அவரின் தவ வலிமை குறைந்தது.
ஆசிரமத்துக்கு தாமதமாக வந்த ரேணுகாவின் மனமாற்றத்தை, ஞான திருஷ்டியால் உணர்ந்த ஜமதக்னி, மனைவியை கொல்ல மூத்த மகன்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் மறுக்கவே, ஆறாவதாக பிறந்த பரசுராமன், ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாக்கியத்துக்கு ஏற்றவாறு தாயாரின் தலையை வெட்டினார்.
மகனின் செயலை கண்டு மகிழ்ந்த ஜமதக்னி, மகனிடம் கேட்கும் வரம் தருவதாக தெரிவித்தார். அவரும், தாயாரை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்ற வரம் கேட்டார். தந்தையும் அவ்வாறே செய்து, ரேணுகா தேவி எல்லம்மாவாக உயிர்த்தெழுந்தார்.
தெய்வீக வடிவம் பெற்ற பின், எல்லம்மா தன் பக்தர்களுக்கு ஆசிர்வதிக்க, நாடு முழுதும் பயணம் செய்தார். அவர், நாகவியை அடைந்தபோது, நிரந்தரமாக வசிக்க இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார். கோவிலுக்கு அருகேயுள்ள புனிதமான நாக குளத்தை குறிக்கும் வகையில், நாக (பாம்பு) மற்றும் லாபி (குளம்) ஆகிய சொற்களில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. தெய்வீக பாம்புகள், எல்லம்மாவிடம் தங்கள் பக்தியை செலுத்தியதாகவும், அதனால் அவர், ‘நாகவி எல்லம்மா’ என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ராஷ்டிரிய மன்னர்கள், தங்கள் குலதெய்வத்தை போற்றும் வகையில், 1,000 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தில் ஒரு கோவிலை கட்டினர். ஒவ்வொரு முறை போருக்கு செல்லும் போது அல்லது முடிசூட்டு விழாவுக்கு முன், அவர்கள் வெற்றி மற்றும் பாதுகாப்புக்காக எல்லம்மா ஆசியை நாடினர். அவர்கள் நீதியுடன் ஆட்சி செய்யும் வரை, அவர்களின் கனவில் தோன்றி, பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்ததாக நம்பப்படுகிறது.
அருகில் உள்ள புனித நந்திபாவி, தேவிக்காக தவம் செய்யும் ஒரு தெய்வீக நாகத்தின் இருப்பிடமாக நம்பப்படுகிறது. புனிதமான நாட்களில் நீர் மட்டம் உயர்கிறது. இக்கோவில் திராவிட மற்றும் டெக்கான் கட்டட கலையை பிரதிபலிக்கிறது. உள்ளூர் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் துாண்கள், கல் சுவர்களில் பண்டைய கால பகுதியாக இருந்த இடைக்கால கட்டட கலையின் எச்சமான புகழ் பெற்ற, ‘60 துாண் கோவில்’ அமைந்து உள்ளது.
இக்கோவில் அருகே நந்தி பாவி (புனித குளம்) எனப்படும், புனித படிக்கிணறு உள்ளது. ஆண்டு முழுதும் இதில் நீர் வற்றாமல் உள்ளது. ஆண்டுதோறும் எல்லம்மா திருவிழா கொண்டாடப்படுகிறது. கர்நாடகா மட்டுமின்றி, தெலுங்கானாவில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பஜனைகள், சமபந்தி விருந்து நடக்கிறது. வெள்ளிக்கிழமை, பவுர்ணமி நாட்கள், சங்கராந்தி போன்றவை மங்களகரமானவையாக கருதப் படுகின்றன.
ஆட்டோவில் செல்லலாம்
1. விமானத்தில் செல்வோர், கலபுரகி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 40 முதல் 50 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
2. ரயிலில் செல்வோர், சித்தாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.
3. பஸ்சில் செல்வோர், சித்தாபூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். தொடர்புக்கு: 73385 57835