பதிவு செய்த நாள்
31
மார்
2026
09:03
பொதுவாக கோவில்களின் கருவறைக்குள் சென்று, சாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால், தங்கள் இஷ்ட தெய்வத்தை துாரத்தில் நின்று பார்த்த திருப்தியில் பக்தர்கள் சென்று விடுவர். ஆனால், கருவறைக்குள் சென்று, சாமியை தரிசிக்கவும் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவில் பற்றி பார்க்கலாம்.
ஹாசன் தாலுகாவில் உள்ளது கொண்டாஜி கிராமம். இங்குள்ளது அல் லாலநாதர் கோவில். சென்னகேசவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில், ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட பெருமாள் சிலை உள்ளது. சங்கு, சக்கரம், தாமரையை கையில் தாங்கி பிடித்தபடி, சென்னகேசவ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
ஹொய்சாளா கட்டட கலை பாணியில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலில் உள்ள பெருமாள் சிலை, பேலுாரில் உள்ள சென்னகேசவா கோவிலுக்கு பிரதிஷ்டை செய்ய கொண்டு செல்லப்பட்டது. அங்கு போதிய இட வசதி இல்லாதால், அல்லாலநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலில் கருவறைக்குள் சென்று, பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு உள்ளது. கோவிலுக்குள் உள்ள மாடங்கள் வழியாக ஏறி சென்று, பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர். கோவிலுக்கு அருகே ஏரியும் உள்ளது. அங்கு படகு சவாரி நடக்கிறது. சாமி தரிசனம் முடிந்து, பொழுது போக்க ஏற்ற இடமாக உள்ளது. தினமும் காலை, 6:00 முதல் இரவு 7:00 மணி வரை, கோவில் நடை திறந்து இருக்கும்.
பெங்களூரில் இருந்து 3 மணி நேரம் பயணம்
1. பெங்களூரில் இருந்து, 200 கி.மீ., துாரத்தில் கோவில் அமைந்து உள்ளது. மூன்று மணி நேர பயணம்.
2. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, ஹாசனுக்கு அடிக்கடி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
3. ஹாசன் சென்று அங்கிருந்து, 18 கி.மீ., துாரத்தில் உள்ள கொண்டாஜிக்கு டவுன் பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.
4. ரயிலில் சென்றால் ஹாசனில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.