பதிவு செய்த நாள்
31
மார்
2026
09:03
உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுகாவின் சூடா கிராமத்தில் அமைந்து உள்ளது சூடா ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்.
புராணங்களின்படி, கடவுள்களுக்கும், அரக்கர்களுக்கும் இடையே போர் மூண்டது. அப்போது, கடவுள்களை தாரகாசுரன் அடைத்து வைத்திருந்தான். அவர்களை மீட்கப்பதற்காக சுப்பிரமணியர் வந்தார். சுப்பிரமணியருக்கும், தாரகாசுரனுக்கும் இடையேயான போரில், தாய் சக்தி வழங்கிய வேலினால், தாரகாசுரனை வதம் செய்தார்.
போரில் வெற்றி பெற்ற பின், அமைதியான வாழ்க்கை வாழ, பாம்புகளுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சுப்பிரமணியரின் தீவிர பக்தரான பாம்புகளின் ராஜாவான வாசுகி, என்னுடனே எப்போதும் இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
வாசுகியின் பக்தியால் மகிழ்ந்த சுப்பிரமணியரும் அதற்கு சம்மதித்தார். எங்கெல்லாம் நாக ஆராதனை நடக்கிறதோ, அங்கெல்லாம் நானும் இருப்பேன் என்றும், வாக்குறுதி அளித்தார். அதன்படி முன்னொரு காலத்தில், முனிவர் பார்கவா, வாசுகி மஹா நாகராஜாவுடன், சுப்பிரமணியரையும் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் இக்கோவிலில் சுப்பிரமணியரையும், பாம்புகளையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
நாகதோஷம் நீங்கவும், திருமணம் நடக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், குடும்ப பிரச்னைகள் தீரவும், பக்தர்கள் இங்கு வந்து பூஜை செய்கின்றனர். பிரச்னைகள் தீருவதாக நம்புகின்றனர்.
நவம்பர் – டிசம்பர் மாதங்களில், இக்கோவிலில் திருவிழா நடக்கிறது. நாகபஞ்சமி மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் வாசுகி மற்றும் இதர பாம்புகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதுதவிர, கந்த சஷ்டி, ஆண்டு ரத உத்சவமும் நடத்தப்படுகிறது.