பதிவு செய்த நாள்
09
ஏப்
2026
11:04
உடுமலை: பவுர்ணமி பூஜை மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் விரைவில் கிடைக்கவும், பவுர்ணமி பூஜை மிகவும் அவசியம்.
பவுர்ணமி தினம் அம்பாளுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினத்தில் அம்பாளை வழிபட்டு வந்தால், அம்பாள் மகிழ்ந்து மனம் பூரிப்படைந்து எல்லா வகையிலும் நன்மை செய்வாள். சக்தி சிவனுடன் ஐக்கியம்தான். எனவே பவுர்ணமி பூஜை சிவசக்திக்கு உகந்தது.
பவுர்ணமி தினத்தில் சிவசக்தியை வழிபடுவதால், குடும்பத்தில் இருள் நீங்கி ஒளி உண்டாகும்.
பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெறுதல், மகப்பேறு பெறுதல், வேலை அமைதல், படிப்பில் முன்னேற்றம் அடைதல், புதிய வியாபாரம் தொடங்கி நன்மை பெறுதல், செய்யும் தொழிலில், வியாபாரத்தில் நல்ல லாபம் அடைதல், துன்பம், கஷ்டம், பாவம் தோஷம் விலகி நன்மை பெறுதல், எடுக்கும் காரியம் எல்லாம் வெற்றி அடைதல், நோய் தீருதல் போன்றவை நன்மையான முறையில் நடக்கும்.
பவுர்ணமி பூஜை செய்யும் நபர்கள், அன்றைய தினத்தில் உபவாசம் இருந்து அம்மனை வழிபட்டால், சகல சவுபாக்கியத்துடன் வாழலாம்.
பிரதி மாதம் பவுர்ணமி நாளன்று, சந்திரன் பூரண கலையுடன் பிரகாசிக்கும் நல்ல வேளையில் மக்கள் நலன் கருதி, மிக அபூர்வமான அற்புதமான வழிபாடுகள் முறையாகவும், திருத்தமாகவும் வேத விற்பன்னர்களை கொண்டு, அந்தந்த மாதங்களுக்குரிய பூஜைகள் பொலிவோடு, உடுமலை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வருகிறது.
ஆடிவெள்ளி, தை வெள்ளி சிறப்பு
தட்சிணாயனம், உத்தராயனம் என்ற இவ்விரு அயனங்களுமே புண்ணிய காலங்கள், தட்சிணாயனத்தின் ஆரம்பம் ஆடி மாதம், உத்தராயணத்தின் ஆரம்பம் தை மாதம். அயன ஆரம்ப காலமாகவுள்ள இவ்விரு மாதங்களும் சிறப்புடையவை.
பொதுவாக வெள்ளிக்கிழமை அம்பாளுக்குரிய சிறந்த நாள். இதோடு அயன ஆரம்பம் என்னும் சிறப்பும் சேருகின்றதால், இவ்விரு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றன.
இம்முறை பற்றியே இவ்விரு மாதங்களிலும் வரும் அமாவாசை, கிருத்திகை நாட்களும் மிகவும் விசேஷமுடையனவாகக் கொள்ளப்படுகின்றன.
தை அமாவாசை, தைக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை ஆகியவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.
அம்பாளுக்குரிய விரத நாள்கள் வெள்ளிக்கிழமை விரதம், நவராத்திரி விரதம் ஆகியனவாகும்.
ஒவ்வொரு ஆடி மாத வெள்ளிக்கிழமையில், விசேஷ அபிஷேகம், அலங்காரம் மஞ்சள் காப்பு, மாக்காப்பு, சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, குங்கும காப்பு அம்மனுக்கு செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறும். கூழ் ஊற்றுதல் விழாவும் சிறப்பாக கோவிலில் நடைபெற்று வருகிறது.