பதிவு செய்த நாள்
09
ஏப்
2026
11:04
உடுமலை: மக்களை தேடி வந்து அருள்பாலிக்க, உற்சவராக மாரியம்மன் தேரில் எழுந்தருளி, வலம் வரும் தேர்த்திருவிழா பல்வேறு வரலாற்று சிறப்புகளையும் உள்ளடக்கியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுக்கு ஒரு முறை அம்மனை அமைதிப்படுத்தவும் தினந்தோறும் சென்று பார்க்கும் அம்மனின் சிலை ஒரே ஒரு நாள் உற்சவராக தம் மக்களை நேரில் சந்தித்து அருள்பாலிப்பதாகக் கருதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.இந்த விழா மக்களின் மனங்களில் பெருமகிழ்வு விழாவாக இருக்கும். இது அக்காலங்களில் அனைத்து தரப்பினரும் ஒரு நாள் தங்களின் உழைப்புக்கு விடுமுறை அளித்து, குடும்பத்தோடு சொந்த பந்தங்களோடு ஒன்று சேரும் திருவிழாவாக இருக்கிறது.
உடுமலை தேர்த்திருவிழா என்பது தளி பாளையப்பட்டு சமஸ்தானத்தால், கி.பி.1600க்கு பிறகு உருவாக்கப்பட்டு நடைமுறையில் வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பு மாரியம்மன் கோவிலுக்கு, வடக்கில் பெரும்பாலும் வெற்றிடங்களாகவும் விவசாய பூமிகளாகவும் இருந்தது.
உழவோடு கலந்த உழைப்பு, சமூகமும் உடைமை சமூகமும், ஒவ்வொரு ஆண்டும் மாசி அடுத்து பங்குனியில் வரும் அமாவாசைக்கு அடுத்த செவ்வாய்கிழமையில், இசைக்கருவியால் அம்மன் குறித்தான நாட்டுப்புற பாடல்கள் பாடி நகரம் முழுமைக்கும், ஒவ்வொரு மண்டகபடியிலும் நின்று மக்கள் கூடும் இடங்களில் நின்று, அம்மனுக்கு நோன்பு சாட்டுவதை ஊர்மக்களுக்கு தெரியப்படுத்துவர்.
அடுத்து துஷ்ட தெய்வங்களுக்கு வேட்டை கழித்தும், அம்மனின் கோவில் சுற்றுச்சுவர்களுக்கு வெள்ளை அடிப்பதும், தேரில் சக்கரங்களை கழட்டி மாட்டி எண்ணெய் ஊற்றி வைத்தும் தேரின் மரவேலைகளை பூசையுடன் துவக்கி வைத்தும் திருத்தேரோட்டவிழாவின் பணிகள் தொடங்கிவிடும்.
நோன்பு சாட்டிய பின்பு நோன்பு முடியும் வரை, 15 நாட்களும் கோவில் சுற்றி கேளிக்கை நிகழ்வுகளும், மண்சார்ந்த குடிகளின் ஆடல் பாடலும் நடக்கும். அதைப்பார்க்க வரும் உறவுகளும் கண்காணிக்கும் அவர்களுக்கு சன்மானம் வழங்கி சிறப்பித்தனர்.
பல்வேறு சமுதாயங்களை ஒருங்கிணைத்து, சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணமாகவும் இத்திருவிழா இன்றும் கொண்டாடப்பட்டு வருவதாக வரலாற்று ஆய்வாளர் செல்வராணி தெரிவித்தார்.
நீர்வளம், நிலவளம் மிக்க உடுமலை; காத்தருளும் மாரியம்மன்
தெய்வீக வளங்களோடும், வனப்புகளோடும் வளர்ந்தோங்கி வருகின்ற தமிழ் நாட்டினுள் பாலாறு, பவானி, அமராவதி முதலிய பல புண்ணிய நதிகளால் சூழப்பெற்றதும், வெள்ளிமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை முதலிய அருட்தன்மை வாய்ந்த வானுயர் மலைகள் அரணாகப்பெற்றது உடுமலை.
சமய குரவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் முதலை வாயினின்றும், மூன்றாண்டுக்கு முன்னர் விழுங்கப்பட்ட பிள்ளையைச்சென்ற ஆண்டுகளும் நிரம்பிய பருவத்தோடு வரவழைக்கப் பெற்ற அதிசயம் அனேகமுற்ற திருத்தலம் திருப்புக்கொளியூர் எனப்படும் அவிநாசி. அதே போல், திருமுருகன்பூண்டி முதலான ஏழு திவ்விய தலங்கள் திருவாவினன்குடி, தென்பழநி, சிவன்மலை, சென்னிமலை, தென்சேரிமலை, குருந்தமலை, கதித்தமலை, மருதமலை முதலான முருகன் கோவில்களையும், குமணன், ஓரி, காரி போன்ற பெரு வள்ளல்கள் வாழ்ந்து அறம்பெருக்கி புகழ் எய்தியதும், இம்மை, மறுமைக்கேதுமான பெருஞ்சிறப்புக்கள் எல்லாமும் செழித்தோங்குவது கொங்குநாடு. கொங்குநாட்டின் கண்ணெனத் திகழும் கோவையில் இருந்து தென்கிழக்கில், 69.கி.மீ தொலைவில், பழம்பதி பழநியிலிருந்து தென்மேற்கில் 35 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ள திவ்விய தலம் உடுமலை மாரியம்மன் கோவில்.
சூரியன் செல்லும் வான் அளவும் வளர்ந்தோங்கி நிற்கின்ற தென்னை மரங்களையும், வாழை, கரும்பு, சோளம், செந்நெல் நிறைந்த செறிவுடையதும், கனிவகை, காய்வகைகளைக் கொடுக்கின்ற மரஞ்செடி மலர்வகை.
கொடிகளையும், கூலங்கள் கூபங்கள், நிறைந்த பூமியால் பொலிவோடு துலங்கும் நகரம் உடுமலையில் காவல் தெய்வமாக பன்னெடுங்காலமாக அருள்பாலித்து வருகிறார் மாரியம்மன்.