பதிவு செய்த நாள்
14
ஏப்
2026
10:04
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, ராயம்பாளையத்திலிருந்து ஆகாசராயர் கோவிலுக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் குதிரையை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என பெருமை கொண்டதாகவும் விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்திரை தேர் திருவிழாவை,ஆண்டுதோறும் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு வரும் செவ்வாய்கிழமை அவிநாசி, ராயம்பாளையம் பகுதி கிராம மக்கள் அவிநாசி மங்கலம் ரோட்டில் ராயன் கோவில் காலனி பகுதியில் எழுந்தருளியுள்ள ஆகாசராயர் கோவிலுக்கு மலர்களால் அலங்கரித்த ஐந்து குதிரைகளை சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி நடுவச்சேரி ரோடு , மடத்துப்பாளையம் ரோடு , தாலுகா ஆபிஸ், கோவை சேலம் மெயின் ரோடு, ராயன் கோவில் காலணி வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
குதிரையைச் சுமந்து ஊர்வலமாக வரும்பொழுது,ஆங்காங்கே சப்பரத்தை சுமந்து வரும் இளைஞர்களுக்கு தண்ணீர் ஊற்றியும், குடிநீர், மோர் மற்றும் குளிர்பானம் ஆகியவை வழங்கியும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவிநாசி நகராட்சி சார்பில் அலுவலகம் முன்பு குதிரைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆகாசராயருக்கு பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.