திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணைக்கோவிலாக பிரணவமலை கைலாசநாதர் கோவில் உள்ளது. கடந்த 2010ல் இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அதன் பின், பங்குனி உத்திரம், ஆடிப்புரம் விழா நடத்துவதற்கு ஏதுவாக கொடிமரம் அமைக்கப்பட்டது. திருப்படித்திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்போரூருக்கு வந்த பக்தர்கள் சத்திரங்களில் தங்கி இசை நிகழ்ச்சி நடத்தினர். அதேபோல், பிரணவ மலையில் உள்ள 100க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் மஞ்சள், குங்குமம் பொட்டுகள் வைத்து தேவாரம், திருவாசகம் பாடி தீபங்கள் ஏற்றினர்.
கைலாசநாதர், பாலாம்பிகை அம்மனுக்கு நேற்று விடியற்காலை 3:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர். கோவில் உள்பிரகாரத்தில் உள்ள சுரங்கபாதை, வெளிபிரகாரத்தில் வீடுகள் கட்டும் வேண்டுதலுக்காக சிறிய கல் வீடு கட்டி வழிபாடு செய்தனர். முன்னதாக, பக்தர்கள் வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடத்துடன் புறப்பட்டு, கந்தசுவாமி கோவிலுக்கு வந்தடைந்து உற்சவருக்கு பாலபிஷேகம் செய்தனர்.