பரமக்குடி: பரமக்குடி சின்னக்கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி பூச்சொரிதல் விழா நடந்தது.
கோயிலில் 45ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று காலை தொடங்கி நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் நடந்து வெள்ளி கவசத்தில் அம்மன் அருள் பாலித்தார். மாலை 6:30 மணிக்கு 50க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை பெண்கள் எடுத்து நகர்வலம் வந்தனர். வான வேடிக்கைகள், மேளதாளம் முழங்க இரவு 8:00 மணிக்கு பூத்தட்டுகள் கோயிலை அடைந்தன. பின்னர் மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, துளசி, தாமரை உள்ளிட்ட அனைத்து பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு கயிலை வாத்தியம் முழங்க, மகா தீப ஆராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.