திருப்புத்தூரில் ஜெயந்தன் பூஜை விழா: மாவிளக்கேற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2026 05:04
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் யோகபைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி வழிபட்டனர். பைரவர் குதிரை வாகனத்தில் திருவீதி வலம் வந்தார்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இந்திரனின் மகனான ஜெயந்தன் முனிவரின் சாப விமோசனத்திற்காக இத்தலத்தில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவரை வழிபட்டார். அதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை முதல் வெள்ளிக்கிழமை ‛ஜெயந்தன் பூஜை’ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு பைரவர் சன்னதி யாகசாலையில் பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் அஷ்ட பைரவர் யாக பூஜைகள் நடத்தினர். யாகசாலை பூஜைகள் நிறைவிற்கு பின்னர் பூர்ணாகுதி ஆகி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைவருக்கு சிறப்பு பூஜைகளுடன் அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. திரளாக பக்தர்கள் கூடி தரிசித்தனர். நேற்று காலை முதல் சுற்று வட்டாரக் கிராமத்தினர் பைரவரை தரிசித்தனர். பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. இரவில் திருநாள் மண்டத்தில் குதிரை வாகனத்தில் உற்ஸவ பைரவர் எழுந்தருளி தீபாராதனை நடந்தது பின்னர் சுவாமி திருவீதி வலம் வந்தார்.