பதிவு செய்த நாள்
22
ஏப்
2026
07:04
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. பக்தர்களை தன் வசம் சுண்டி இழுக்கிறது. இந்த கோவிலை பற்றி தெரிந்து கொண்டால், கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
தட்சிண கன்னடா மாவட்டத்தின் ஜீவநதி நேத்ராவதி. இந்த ஆற்றங்கரையில் பயங்கரேஸ்வரர் என்ற அற்புதமான கோவில் உள்ளது. இது சாதாரணமான கோவில் அல்ல. பல சிறப்புகளை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இதனை, ‘பயங்கரேஸ்வர சதாசிவா’ கோவில் என்றும் அழைக்கின்றனர்.
இயற்கை எழில் மிகுந்த, அமைதியான சூழ்நிலையில் கோவில் அமைந்திருப்பது, மற்றொரு சிறப்பு. கோவிலை ஒட்டி நேத்ராவதி ஆறு பாய்கிறது. ஆழம் இருப்பதால் நீச்சல் தெரியாதவர்கள், நீரில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். வெள்ளப்பெருக்கு தட்சிணகன்னடா மாவட்டத்தின் மகிமை வாய்ந்த கோவில்களில், இதுவும் ஒன்றாகும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கவுதி அரசரான சிவப்பா நாயக்கர், திப்புவின் காலத்தில் பக்தர்களால் பூஜிக்கப்பட்ட, பிரபலமான சிவன் கோவில் இதுவாகும். 1923ம் ஆண்டு நேத்ராவதி ஆற்றில், பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அந்த வெள்ளத்தில் சிக்கி, கோவில் முழுதும் சேதமடைந்தது. அதன்பின் நரிகொம்பு கிராமத்தின், பிரபலமான சோமாயாஜி குடும்பத்தினர், கோவிலை மேம்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சோமாயாஜி சகோதரர்கள், 6 கோடி ரூபாய் செலவில், கோவிலில் திருப்பணிகள் செய்தனர். தற்போது ரகுநாத் சோமாயாஜி, கோவிலின் டிரஸ்ட் தலைவராக இருக்கிறார். இவர் மற்ற டிரஸ்டிகளுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். பயங்கரேஸ்வரர் கோவில் உண்டியல் பணம், ஏழை மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
கிராமத்தில் ஏழைகளின் மருத்துவ சிகிச்சை, வீடுகளை பழுது பார்ப்பது, கல்வி கட்டணம் உட்பட பல தேவைகளுக்கு கோவில் உண்டியல் பணத்தை வழங்குகின்றனர். தற்போது வீடு இல்லாத இரு குடும்பங்களுக்கு, புதிதாக வீடு கட்டப்படுகிறது. டிரஸ்டில் உள்ள நன்கொடையாளர்கள், கோவிலின் மேம்பாட்டுக்கு நிதி வழங்குகின்றனர்.
தினமும் அன்னதானம் பயங்கரேஸ்வரர் கோவிலில் தினமும் அன்னதானம் நடக்கிறது. 400க்கும் மேற்பட்டோர் உணவருந்துகின்றனர். இங்கு சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், திருவிழா நடக்கிறது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். பயங்கரேஸ்வரரை தரிசனம் செய்தால், குடும்பத்தில் நிம்மதி, அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண தடை நீங்கும். குழந்தையில்லா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும்.