பதிவு செய்த நாள்
22
ஏப்
2026
07:04
பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, மஹாகாளியே விரும்பி தங்கிய இடம் உடுப்பி மாவட்டம் அம்பல்பாடியில் அமைந்துள்ளது ‘ஸ்ரீ ஜனார்த்தன மற்றும் ஸ்ரீ மஹாகாளி கோவில்’. அம்பல்பாடி என்பது அம்மனின் பாடி அதாவது ‘தாயின் வனம்’ என்று பொருள்.
புராணங்கள்படி, இப்பகுதியை பாதுகாப்பதற்காக, மஹாகாளி தேவி, இங்கு அவதரித்தார். தேவியை தேடி வந்த ஜனார்த்தன பெருமாளும், பக்தர்களை பாதுகாக்க, அவரும் இங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மஹாகாளி தேவியை ஒரு கல் வடிவில் வழிபட்டனர். இந்த கல் வடிவம், இன்றும் கருவறையில் உள்ள ஆறு அடி உயர மர சிலையுடன் சேர்ந்து வணங்கப்படுகிறது. இக்கோவிலின் முக்கிய திருவிழா நவராத்திரியாகும். இதன் கடைசி நாளில் (மகா நவமி) நடத்தப்படும் சண்டிகா ஹோமம், அன்னதானம் ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இக்கோவிலின் ஒரு தனித்துவமான சடங்கு ‘அருள் வாக்கு’ சடங்காகும். இதில், ‘பத்திரி’ என்று அழைக்கப்படும் ஒரு நபர் மூலம், மஹாகாளி தேவி பக்தர்களுடன் தொடர்பு கொள்வதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை இந்நிகழ்வு நடக்கும். பக்தர்களின் தனிப்பட்ட கவலைகளுக்கு தீர்வு காண்கிறது. மாசி மாதத்தில், ஆண்டுதோறும் ரத உத்சவம் நடக்கிறது.
பாரம்பரிய கடற்கறை கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்து உள்ள ஜனார்த்தன கோவிலின் நுழைவு வாயிலில், கம்பீரமான கருட கம்பம் அமைந்து உள்ளது. அதன் அருகில் தெற்கு திசையில், மேற்கு நோக்கி மஹாகாளி சன்னதி அமைந்து உள்ளது. கோவில் வளாகத்தில் ஜனார்த்தன தெப்பகுளம் மற்றும் ராகவேந்திர சுவாமியால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பிருந்தாவனம் என்ற தோட்டமும் அமைந்து உள்ளது.