பதிவு செய்த நாள்
25
ஏப்
2026
10:04
பெருமாநல்லுார்: -பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழாஆயத்தப் பணிகள் பக்தி மணக்கத் தொடங்கின. மே மாதம் 1-ம் தேதி நடைபெறவுள்ள தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் அலங்கரிக்கும் பணிகளுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, காலை 10:00 மணிக்கு மூலவர் ஸ்ரீ உத்தமலிங்கேஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தேறின.
மாலை 6:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, விநாயகர் தேர் மற்றும் உத்தமலிங்கேஸ்வரர் தேர்களுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு 9:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருவிழா நிகழ்ச்சி அட்டவணை: இன்று: காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவக்கம்.
ஏப். 29: இரவு 8:00 மணிக்கு எம்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.
ஏப். 30: இரவு திருக்கல்யாண வைபவம்.
மே 1 : மாலை 3:30 மணியளவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
மே 2-: இரவு 8 மணிக்கு பரிவேட்டை, சுவாமி குதிரை வாகனப் புறப்பாடு
மே 3-: காலை 9:00 சிறப்புத்தரிசனம், நடராஜர் அபிஷேகம்.