திருமலையில் பெரிய உணவகங்களை விரைவில் திறக்க உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 03:04
திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கோடை விடுமுறை காரணமாக அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து கூட்டம் நடைபெற்றது.
திருமலை திருப்பதியில் அன்ன பிரசாத கூடங்கள் இருந்தாலும் அதைத் தாண்டி பெரிய உணவகங்களை கட்டி , அவற்றை உடனே பக்தர்களின் பயன்பாட்டிற்குத் திறக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில் தேவஸ்தானம் நிர்ணயித்துள்ள விலையிலேயே உணவுப் பொருட்களை விற்க வேண்டும் என்றும், பாரம்பரிய உணவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். உணவகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க முதலிடம் அளிக்கப்பட வேண்டும். சாதாரண மக்களுக்கான ஜனதா உணவகங்களில் தரமான உணவை மலிவு விலையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. புதிய ஓய்வறைகளைக் கட்டி வரும் கொடையாளர்கள், வரும் மே 15-ஆம் தேதிக்குள் பணிகளை முடித்து தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்படும் ஒவ்வொரு ஓய்வறையிலும் கட்டாயம் மின் இயக்கி வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.