குன்னூர்: குன்னூர் சந்திரா காலனி பொதுமக்கள் சார்பில், தந்தி மாரியம்மன் கோவிலில், 19வது ஆண்டு தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் நடந்து வருகிறது. இன்று சந்திரா காலனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில், 19வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது. காலை 8 மணிக்கு, கரோலினா மாகாளியம்மன் கோவிலிலிருந்து தவில், நாதஸ்வரம், கேரள சிங்காரி மேளத்துடன் அபிஷேகப் பொருட்கள் மற்றும் தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது. இதில், கரடி, பாண்டா, காவடி ஆகியவற்றுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சந்திரா காலனி வளாகத்தில் அன்னதானம், சிங்காரி மேளம், வானவேடிக்கை உள்ளிட்டவை நடந்தன. மாரியம்மன் சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளிய தேர் ஊர்வலம், சந்திரா காலனியை அடைந்தது. ஏற்பாடுகளை, சந்திரா காலனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.