பதிவு செய்த நாள்
18
ஆக
2026
09:08
சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சந்நிதானத்தின், 34 வது வர்த்தந்தி (பிறந்தநாள்) சிருங்கேரியில் நேற்று கொண்டாடப்பட்டது. மடத்தின் முதன்மை செயல் அதிகாரி முரளி, ஸ்ரீமடத்தின் அனேக சேவைகளை குறிப்பிட்டு உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, சுவாமிகள் வழங்கிய அருளுரை: சனாதன தர்ம வைதிக மார்க்கத்தினை காப்பாற்றுவதற்காக அவதரித்தவர் ஆதி சங்கரர். அவரை எப்போதும் நினைவில் கொள்வதும், அவருடைய போதனைகளை கடைப்பிடிப்பதும் ஒவ்வொருவரின் கடமை. அதன் வாயிலாக நமது பிறவி அர்த்தமுள்ளதாகிறதும் குரு மற்றும் இறைவனின் கருணைக்கு பாத்திரமாகிறோம்.
நன்றாக வேதாந்தத்தினை படித்திருந்தாலும், வைராக்கியம் கைகூடுவதும், அதனை வாழ்க்கையில் செயல்படுத்துவதும் என்பது சிலரால் தான் மட்டுமே முடிகிறது என்பதன் காரணம் மாயையே ஆகும். அதனின்று வெளிவருவதற்கு இறைவன் மற்றும் குருவின் அனுக்ரஹம் தேவை. இதைத்தான் பஜகோவிந்தத்தில் ஆதி சங்கரர் கூறுகிறார்.
ஆதிசங்கரரின் உயர்ந்த கொள்கையான பிரம்ம சத்யம், ஜகன் (உலகம்) மித்யா (மாயை) என்பதனை சரியாக புரிந்து கொள்வது அவசியம். அதாவது, உலகம் என்பதில் காணப்படும் அனைத்தும் மாற்றத்துக்கு உடபடுவதால் அதன் தோற்றங்கள் மாயை. மாறாத நிரந்தரமான பிரம்மம் மட்டுமே உண்மை என்பதே இதன் சரியான விளக்கம். மாயை என்பது இல்லாதது என்பது அர்த்தமல்ல. நாம் பார்ப்பதெல்லாம் மாறக்கூடியது என்பதால் தோற்றமே மாயை. உலகமே மாயை என்பது சரியல்ல.
நம் நாட்டில் இருப்பது உயர்ந்த சனாதன தர்மம். இந்த தர்மம் ஏதோ ஒருவரால் செய்யப்பட்டது அல்ல. அது அனாதி யாகும். நாம் கடைப்பிடிக்கும் தர்ம பரம்பரை உலகம் தோன்றிய முதல் இருக்கும் ஒரு உன்னத மார்க்கமாகும்.
வேதங்களும், உப நிஷதங்களும், புராணங்களும் தெளிவாக கூறும் அத்வைத தத்துவத்தினை பிரசாரம் செய்து வலுப்படுத்த சாட்சாத் ஈஸ்வரனே எடுத்த அவதாரம்தான் ஆதி சங்கரரின் அவதாரம். அவ்வுயர்ந்த தத்துவத்தினை பிரசாரம் செய்வதற்காக ஏற்படுத்திய இந்தியாவின் நான்கு திசைகளில் நான்கு ஆம்நாய பீடங்களை நிறுவினார்.
தென்திசைக்கான ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பிகையினையும் ஸ்தாபித்து அனுக்ரஹித்தார்.
இப்பீடத்தின் குரு வாக்கியத்தினை வேதவாக்கியமாகக் கொண்டு வாழ்க்கையினை நடத்திவரும் சிஷ்யர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள்.
இவ்வாறு சுவாமி அருளுரை வழங்கினார்.
முன்னதாக, சுவாமிக்கு, ராமேஸ்வரம், மூகாம்பிகை, திருப்பதி, கோகர்ணம், திருச்செந்துார் உட்பட கோவில்களின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.