வேத முழக்கத்துடன் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2026 11:08
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வேதமந்திரங்கள், பன்னிரு திருமுறை பாராயணம் முழங்க நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டனர்.
கடந்த 22-ம் தேதி பிள்ளையார் வழிபாடு, கோமாதா பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை நிறைவேள்வியைத் தொடர்ந்து, மங்கள வாத்திய இசையுடன் திருக்குடங்கள் புறப்பட்டு, காலை 8:00 மணிக்கு கோவில் விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள், திருநெறிய தமிழ்முறைப்படி புனித தீர்த்தத்தை சக்தி விநாயகருக்கு ஊற்றி, பூஜைகள் செய்தனர்.
கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, பதின்மங்கல காட்சி, பேரொளி வழிபாடு நடைபெற்றன.
காலை 9:00 மணி முதல் பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.