தற்போது ஏழரைச் சனி நடக்கிறதா? அஷ்டமத்து சனியின் பிடியில் அகப்பட்டு சிரமப் படுகிறீர்களா? ஜாதக ரீதியாக சனி தசையில் சனி புத்தி நடக்கிறதா? இதரவகையில் கஷ்டப்படுகிறீர்களா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருநள்ளாறு நள்ளாற்றீஸ்வரர் கோயில். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராட வேண்டும். தீர்த்தக்கரையிலுள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தத்தில் உள்ள புனிதநீரை தலையில் தெளித்து, ராஜகோபுரத்தை தரிசிக்க வேண்டும். கோயிலுக்குள் சென்றதும் இடையன் சன்னதியை தரிசிக்க வேண்டும். பிறகு, தியாகராஜர் சன்னதிக்கு சென்று அவரைத் தரிசனம் செய்த பின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் போகமார்த்த முலையாளை தரிசிக்க வேண்டும். பிரகாரம் சுற்றி வந்து நளதமயந்தி ஓவியங்களைப் பார்த்தபடியே, அவர்களை மனதார நினைக்க வேண்டும். வசதி யுள்ளவர்கள் சனீஸ்வரர் சன்னதியில் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தலாம். மற்றவர்கள் தேங்காய் உடைத்து, எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். வெளியே வந்து மீண்டும் ராஜகோபுரதரிசனம் செய்து திரும்பலாம். திருநள்ளாறு செல்ல வசதி யில்லாதவர்கள் எளிய பரிகாரம் ஒன்றைச் செய்யலாம். உள்ளூர் சிவாலயத்திலுள்ள சனீஸ்வரர் சன்னதி அல்லது நவக்கிரக சன்னதியிலுள்ள சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் எள்எண்ணெய் தீபம் ஏற்றலாம். பாடல் ஒன்றை தினமும் 3 முறை சொல்ல வேண்டும். மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அந்நெறி செல்லன்மின் மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே நாசம் செய்த எம்பெருமான் மேயது நள்ளாறே! இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். சனிதோஷத்தின் தாக்கம் மிகவும் குறைந்து சிரமங்களைத் தாங்கும் சக்தி பெறுவீர்கள்.