பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
10:04
திருத்தணி: முத்துமாரியம்மன் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவில், பக்தர்கள் அக்னி கரகம் ஏந்தி அம்மனை வழிபட்டனர். திருத்தணி பெரியார் நகரில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோவில். இக்கோவிலில், ஐந்தாம் ஆண்டு பங்குனி மாத திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. இரவு உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக புறப்பட்டு, பெரியார் நகர் முழுவதும் உள்ள வீதிகளில் வலம் வந்தது. காலை, 10:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து, இரவு, 7:30 மணிக்கு, 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, அக்னி கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று மூலவர் அம்மனை வழிபட்டனர். இன்று மதியம் மஞ்சள் நீராட்டு விழாவுடன், பங்குனி மாத ஐந்தாம் ஆண்டு விழா நிறைவு பெறுகிறது.