பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
திருவெண்ணெய்நல்லூர்: கூத்தாண்டவர் கோவிலில் இன்று சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், கூ வாகம், கூத்தாண்டவர் கோவிலில் இன்று 9ம்தேதி மாலை, சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்குகிறது. நாளை 10ம் தேதி, பந்தலடியில், ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. 23ம்தேதி இரவு மும்பை, சென்னை, டில்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் நாட்டின் பல மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.
வரும் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நத்தம், தொட்டி வழியாக தேர் பந்தலடிக்குச் சென்றடைகிறது. அங்கு மதியம் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள், தாலிகளை அறுத்தெறிந்து, விதவைக்கோலம் பூண்டு, அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு, ஊருக்கு திரும்புவர். மாலை 5 மணிக்கு உறுமைசோறு படையல் நடக்கிறது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்குவர். மாலை 7:00 மணிக்கு, காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்குக் கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.